Sunday, March 27, 2011

வாக்குரிமை நம் கடமை

                    தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது.  இந்தச்சூழ்நிலையில் சில செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகின்றேன். வாக்குரிமை என்பது ஜனநாயக நாட்டில்தான் நாம் இன்னும் வாழ்கிறோம் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது.

                  பொதுவாக நாட்டைப் பற்றி, அரசியலைப் பற்றி அவதூறாகப் பேசுகின்றவர்களுள் பலர் வாக்களிப்பதே இல்லை. அரசியல் இப்படி தரம் தாழ்ந்து போனதற்கு நாமும் ஒரு காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நம்முடைய வாக்களிக்கும் கடமையை நாம் சரியாகச் செய்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்குமா? 

              இன்றைய நாளில் தேசிய அளவிலும் சரி, மாநில அளவுகளிலும் சரி ஊழல் பெருகி விட்டது. இதில் வருத்தம் என்னவென்றால் தவறு செய்தவர்கள் அதற்காக வருத்தப் படுவது கூட இல்லை. இதில் கூடுதல் வேதனை யாதெனில் தங்கள் தவறுகளை நியாயப் படுத்தும் கொடுமையும் இங்குதான் நடக்கிறது.

                 பொறுப்பான பதவியில் வகிக்கும் நம் நாட்டுப் பிரதமர் கூட சில வேளைகளில் தனக்கும் இந்த நாட்டிற்கும் சம்பந்தம் இல்லாதவர் பதில் கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. பி.ஜே.தாமஸ் விவகாரம் இதற்கு உதாரணம். 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தைப் பற்றி கேட்டால் கூட்டணி நிர்பந்தம் என்கிறார். கூட்டணி என்ற போர்வையில் நாட்டை ஒரு சிலர் கொள்ளையடிப்பதை வேடிக்கைப் பார்க்கும் நபர்தான் நம் நாட்டுப் பிரதமர். அவர்  நேர்மையாக இருந்தும் புண்ணியமில்லையே. 

         ஆங்கிலேயர்களிடம் போராடி, பல உயிர்களை தியாகம் செய்து சுதந்திரம் வாங்கியது இப்படி உள்ளூர் திருடர்களிடம் நாட்டை அடகு வைக்கத்தானா? நான் மட்டும் நலமாக இருந்தால் போதும் என்கின்ற மனநிலை சரிதானா? இந்த சமுதாயம் இப்படியே வீணாவதை பார்க்கும்போது, இந்நிலையை மாற்ற எதுவுமே செய்யாமல் இருக்கிறோமே என்று மனது உறுத்தவில்லையா?


      இங்கு தமிழ்நாட்டில் தி.மு.க இலவசங்களை நம்பியே அரசியல் நடத்துகிறது. இந்த வியாதி இப்போது அ.தி.மு.க விற்கும் தொற்றிக்கொண்டு விட்டது போலும்.  அதற்கு சில காரணங்கள் உண்டு. தேர்தலில் வெற்றி பெறும் நோக்கோடு சில திட்டங்களை அ.தி.மு.க அறிவித்திருந்தாலும் அதி சில நல்ல திட்டங்கள் இடம் பெற்றிருக்கின்றன். அவைகளில் சில இங்கே...




  •   வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவசமாக 3 சென்ட் நிலம்.
  •   முதியோர்கள், ஆதரவற்றோர், குழந்தைகளுக்கு சிறப்பு விடுதிகள் கட்டப்படும்.

  •   தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் அரசுடமையாக்கப்படும். அரசு மானியத்தில் குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி வழங்கப்படும்.

  • அனைத்து விவசாயிகளுக்கும் இலவச சொட்டு நீர்ப் பாசன வசதி செய்து தரப்படும்.

  • இயந்திர மீன்பிடி படகுகள் வாங்கத் தேவையான மானியம் வழங்கப்படும்.



  •  மீன் உற்பத்திக்கு உகந்த வழியில் மீன் பிடிக்க விலக்கு அளிக்கப்பட்ட 45 நாட்களில், மீனவ குடும்பத்திற்கான உதவித் தொகை 2,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
        
  • பருவ காலத்தால் 4 மாதங்களுக்கு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள இயலாத சூழ்நிலையில் இருக்கும் மீனவ குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4,000/- ரூபாயாக வழங்கப்படும். 

  • கிராம, நகர்ப்புறங்களில் 4 ஆண்டுகளில் மும்முனை மின் இணைப்பு வசதி தரப்படும்.

            அ.தி.மு.க வின் தேர்தல் அறிக்கையை பாராட்டி பதிவு செய்வதன் மூலம் எனக்கு அந்தக் கட்சியின் சாயம் பூசிவிட வேண்டாம்.  தி.மு.க அமைச்சர்களின் சொத்துக்களைக் கணக்கிட்டுப் பார்த்தாலே நமக்கு தலை சுற்றும். எல்லோரும் கல்வித்தந்தைகள் ஆகிவிட்டார்கள். யாருடைய பணம்? நம் வரிப்பணம்.  நூற்று இருபது கோடி மக்களை நூறு குடும்பங்கள் ஆள்கின்றது. இது தவறு. நல்லக்கண்ணு ஐயாவைப் போல் ஒரு மனிதரை தி.மு. க வும் சரி, அ.தி.மு.க வும் சரி காட்ட முடியுமா? முடியாது. அதே சமயம், செல்வி. ஜெயலலிதா அவர்களின் நிர்வாகம் சிறப்பாக இருக்கும் என்பது உண்மை.  இன்றைய நாடு, குறிப்பாக தமிழ்நாடு வாழ வேண்டுமென்றால் நாம் வாக்களிக்க வேண்டும். 

இலங்கையில் தமிழர்கள் கொன்று குவித்த போது தன் கட்சி மந்திரிகளை ராஜினாமா செய்யச் சொல்லாத கலைஞர் சீட்(சி.ஐ.டி)   பேரத்திற்காக  ராஜினாமா செய்யச்சொன்னார்.  பின்னர்தான் தெரிந்தது அது சீட் பேரத்திற்காக அல்ல. சி.ஐ.டி யின் பிடியில் இருந்து தப்ப நடைப்பெற்ற கபட நாடகம் என்பது.

அ.தி.மு.க வில் இருந்த வைகோ அவர்களை அதன் தலைமை கைவிட்டதும் வேதனைக்குறியது.  எனினும் தலையை எடுப்பவர்களை விட, கையை எடுப்பவர்கள் மேல் என்றே எனக்குத் தோன்றுகிறது. தி.மு.க விற்காக பிரச்சாரம் செய்ய வலம் வரும் வடிவேலு, குஷ்பு போன்றவர்கள் நாட்டை காப்பாற்றி விடுவார்களா?  வடிவேலு ஒரு காமெடி நடிகர். குஷ்புவிற்கு தமிழ் கூடச் சரியாக பேசத்தெரியாது. 

ஆறு மாதத்திற்கொரு முறை கட்சி மாறும் ராமதாஸ் போன்றவர்கள் நாட்டை ஏமாற்றுபவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். திருமாவளவன் ஈழத்தமிழர்களை நேசிப்பவராகத் தன்னைக் காட்டிக் கொண்டாலும், காங்கிரஸ் கூட்டணியில் நீடிப்பதன் மூலம் அது பொய் என்று வெளிப்படுத்தி விட்டார். இதில் என்னைக் கவர்ந்தவர் சீமான் அவர்கள், வைகோ அவர்கள் மற்றும் நல்லக்கண்ணு ஐயா அவர்கள்.  எது எப்படியோ உங்கள் வாய்ப்பை வீணாக்காதீர்கள். 


 என் வேண்டுகோள் ஒன்றுதான். தமிழர்கள் சாகும்போது கடமை மறந்து செயல்பட்ட காங்கிரஸை இந்த மாநிலத்தை விட்டே துரத்துங்கள். இது என் விருப்பம். எனினும் என் மனசாட்சி சொல்கிறது இப்படி சொல்லச் சொல்லி,


யாருக்காகவும் அல்லாமல் உங்களின் சுய சிந்தனைக்குட்பட்டு வாக்களியுங்கள். 


 
 
          






















No comments:

Post a Comment